பொருள் ஒன்றை வாங்குவதில் அல்லது சேவையை பெறுவதில் இரண்டு வகைகள் இருக்கிறது.
எங்கே ‘விருட்’டென போய் விடுவாரோ என்ற பயத்தில் ஆட்டோ கம்பியைப் இடக்கையால் பிடித்தபடி அல்லது சமயங்களில் தலையையும் சற்று குனிந்துபோகணும். எவ்வளவு?’ என்று கேட்பது முதலாவது வகை. கெளரவம் பார்க்காத சாமன்ய முறை.
எதுவும் பேசாமல் ‘ஜம்’ என்று ஏறி உட்கார்ந்து, ‘எக்மோர் போங்க’ என்று சொல்வது ஃபைவ் ஸ்டார் வகை. ‘ரொம்பவும் அதிகமாக கேட்டு விடுவாரோ’ என்ற பயம் அவ்வப்போது எழுந்தாலும், ‘கெத்’தாக இருக்கும்.
அந்தமான் ரோட்டோரத்தில் ‘ரெண்டு இளநீ வெட்டுங்க, தண்ணியா’ என்று சொல்லிவிட்டு ‘பயணம் வந்திருக்கிறேன். இளநீ விலை எல்லாம் ஒரு பொருட்டல்ல’ என்று தோரணையில் இளநீ குடித்து முடித்தாலும், தமிழ்நாட்டில் கிடைத்த சில பைஃவ் ஸ்டார் அனுபவத்தால் ‘எவ்வளவு சொல்லப் போகிராறோ’ என்று மனதிற்குள் சிறிய கவலை ரேகையாக படர்ந்து கொண்டுதானிருந்தது.
‘சாலிஸ்’ அதாவது நாற்பது என்றதும் நிம்மதியானது. மதுரையில் சமயங்களில் ஐம்பது ரூபாய் சொல்கிறார்கள்.
‘அட, நாற்பது என்றது ஒன்றுக்கு இல்லை. இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக’ என்ற ஆச்சர்யத்தில் திளைத்ததில், பார்த்த இடத்தில் எல்லாம் இளநீதான். எங்கும் அதே இருபது ரூபாய்தான்.
ஆட்டோவிலும் எதுவும் பேசாமல் இருக்கையில் உட்கார்ந்து, போகுமிடத்தைச் சொல்லலாம். குறைந்தபட்ச கட்டணமான இருபது ரூபாயை முகத்தில் எவ்விதச் சலனமுமின்றி வாங்கிக் கொள்கிறார்கள்.
கடற்கரைகளில் சிவப்புத் துணியால் மூடப்பட்ட பானைகளில் வைத்து ‘குல்ஃபி’ விற்கிறார்கள். அதே இருபது ரூபாய். தரம்? பயமே வேண்டாம். அவ்வளவு க்ரீமியாக இருந்ததில் நாலைந்தை தொடர்ந்து விழுங்கினேன். மதுரையில் நூறு ரூபாய்க்கு இன்னமும் நீளமான குச்சியில் கிடைப்பதை விடவும் ‘யம்மி’.
அது என்னமோ, இளநீயைப் போல அந்தமானில் பாலும் சுவையாக இருக்கும் போல. தென் தமிழகத்திலிருந்து அந்தமானில் குடியேறியவர்கள், ஆங்காங்கே சாலையோர டீக்கடைகளில் உளுந்தவடைகளுக்கு மற்ற அந்தமானியர்களை மொத்தமாக அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பெங்காலி, ஒடிசாக்காரர்கள் எல்லாம், ‘அண்ணே வடை’ என்று கூட்டமாக நின்று கொண்டு உரிமையாகக் கேட்டபடி தமிழை வாழ வைக்கிறார்கள்.
கல்கத்தாவில் சிறிய மண்சட்டிகளில் கிடைப்பது போல தெய்வீக சுவை இல்லை என்றாலும், ரசகுலா என்று சொல்லக்கூடிய அளவில் பெங்காலி கடையில் கிடைத்தது.
தமிழ்நாட்டில் ரசகுல்லா என்ற பெயரில் ‘சீனிப்பாகில் ஊறவைத்த பஞ்சு’ போல எதையோ விற்கிறார்கள்.
மற்றபடி காய்கறிகள், பழங்கள், பருப்பு வகை என்று இங்கிருந்து செல்லும் அனைத்தும் அந்தமானில் விலை அதிகம் என்கிறார்கள்.
‘பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கதான். சொந்த ஊர் சிவகங்கை. ஆனால் இதுவரை போனதில்லை’ என்றார் பேச்சுக் கொடுத்த ஆட்டோ டிரைவர். இளைஞர். அவரது சம்பாத்தியத்தில் சொந்தமாக வீடு வாங்கி குடும்பத்தையும் நடத்தில் விடலாம் என்ற நம்பிக்கையுடனிருந்தார்.
இண்டர் கல்சுரல் காதல் கதைகள் உண்டா என்று கேட்க நேரமில்லாதலால் தோன்றவில்லை. பூர்வகுடிகளைத் தவிர்த்து தமிழ், தெலுங்கு ஒடிசா, பிகாரி, பெங்காலிகளோடு அந்தமானியர்கள் என்ற கலவையான சமுதாயம் ஒருவேளை உருவாகிக் கொண்டிருக்கலாம்.
No comments:
Post a Comment