Tuesday 26 April 2016

ஸ்பாட்லைட் (ஹாலிவுட்) 2015

“ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. . ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்”
I கொரிந்தியர் 7:1&2

புனித பவுல் மெத்தப் படித்தவர். மார்க்க அறிஞர். இயேசுவைப் பார்த்திராதவர். இயேசுவின் மரணத்திற்கு, சரி உயிர்த்தெழுதலுக்கு பின்னர் கிறிஸ்தவர்களை துரத்தி துரத்தி வேட்டையாடியவர். ஒரு தருணத்தில் அவரே கிறிஸ்தவராக மாறி பல நாடுகளுக்கும் பயணமாகி ஆங்காங்கே சபைகளை ஏற்படுத்தி கிறிஸ்தவத்தை நிறுவனப்படுத்தியவர்.

மத அறிஞர் என்று அறியப்படும் எவருக்கும் உள்ள பிரச்னைகள் பவுலுக்கும் இருந்தது; எளிமையாக உருக்கொண்டிருக்கும் எந்த நம்பிக்கையிலும் தங்களது அறிவைக் கொட்டி குழப்பியடிப்பது.

மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பல அறவுரைகளைக் கூறிய கிறிஸ்து, தாம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு அதைப் போதிக்கவில்லை.

ஆனால் பிரமச்சாரியாகிய பவுலோ, கிறிஸ்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கப்பட்ட எளிய கேள்விக்கு பதிலளிக்கிறேன் என்ற பெயரில் தொடர்ந்து தனது தர்க்க அறிவு முழுவதையும் மேற்கண்ட கடிதம் முழுவதும் கொட்டிக் குழப்பியதில் கிறிஸ்தவ சபைக்கு ஆரம்பித்த பிரச்னை இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்று வரை தொடர்கிறது.

பாஸ்டன் நகர் சர்ச்’சில் பணியாற்றும் பாதிரி, வசதி வாய்ப்பற்ற சிறுவர்களின் நிர்கதியான நிலையை சாதகமாக்கி அவர்களுடன் தவறாக நடந்து கொண்டது தெரிந்தும் கத்தோலிக்க சபையின் பாஸ்டன் நகர அர்ச் பிஷப் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கிடைத்த ஒற்றை வரி தகவலைப் பிடித்து தொடர்ந்து புலனாய்வு மேற்கொள்கிறார்கள், பாஸ்டன் க்ளோப் என்ற பத்திரிக்கையின் நிரூபர்கள் சிலர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்ட புலனாய்வில் ஒன்றல்ல, பதிமூன்றல்ல குறைந்தது 87 பாதிரிகள் அதாவது 6% சதவீத பாதிரிகள் அவ்வாறு நடந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் மீது பெரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதும் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தாலும், வழக்கு விசாரணைக்கு முன்னரே வக்கீல்கள் துணையுடன் ‘பேசி’ முடிக்கப்பட்ட விபரமும் தெரிய வருகிறது.

பாஸ்டன் க்ளோப் பத்திரிக்கை தனது புலனாய்வு முடிவுகளை பல்வேறு கட்டுரைகளாக தொடர்ந்து எழுதியது. தொடர்ந்து கத்தோலிக்க சபை பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தது என்று நீங்கள் நினைத்தால் தவறு.

ஏதுவும் இல்லை.

தவறுகளை கண்டும் காணாது இருந்த அர்ச் பிஷப் சிறிது காலம் பணியிலிருந்து விலகியிருந்தாலும், பின்னர் ரோம் நகரில் அதை விட பெரிய பொறுப்பு வகிக்க அனுப்பப்பட்டார்.

பொது சேவைக்காக புலிட்ஸர் விருது கிடைத்த பாஸ்டன் க்ளோப் பத்திரிக்கையின் புலனாய்வை ‘ஸ்பாட் லைட்’ என்ற பெயரில் திரைக்கதையாக்கி சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை அள்ளியிருக்கின்றனர்.

பாலியல் குற்றத்திற்காக அமெரிக்காவில் தண்டனை பெற்ற இந்திய பாதிரி ஒருவரை ஊட்டி சபை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளதாக கடந்த வாரம் எழுந்த குற்றச்சாட்டில், நேற்றுப் பார்த்த இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

Friday 22 April 2016

பயணம் ஒண்ணு போதாது?!..,

எண்பதுகளின் இறுதி அல்லது தொண்ணூறுகளின் தொடக்கம் வரை என்று கூட வைத்துக் கொள்ளலாம் கம்யூனிஸம், சே குவாரா, கூட்டுப்பண்ணை என்பவை கல்லூரி, முக்கியமாக தொழிற்கல்லூரி அல்லாத கலைக் கல்லூரி மாணவர்களால் கவர்ச்சிகரமான பதங்களாக பிரயோகிக்கப்பட்டன.

சோவியத் குடியரசின் வீழ்ச்சி, தாராளமயம் புதிய வாய்ப்புகள் தொடர்ந்த ஐ டி துறையின் வளர்ச்சியில் கம்யூனிஸம் அடித்துச் செல்லப்பட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக தொடரும் மந்த நிலையில் வேறு பல புதிய பிரயோகங்கள் முன்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இன அழிப்பு என்பது கூட அவற்றில் இருப்பினும் முக்கியமும் முதலுமானது இயற்கை வேளாண்மை!

மோட்டார் பைக்’கிலேயே இந்தியா முழுவதும் உள்ள இயற்கை வேளாண்மை பண்ணைகளைக் கண்டு விவசாயம் கற்று வரப் போகிறோம் என்று கோவையிலிருந்து கிளம்பிய இரு இளைஞர்களில் ஒருவரான தீபன் தங்களது அனுபவங்களை சுமார் 300 பக்கங்களில் எழுதியுள்ள புத்தகம்தான் ‘பயணம் ஒண்ணு போதாது?!..,’

பயணம் ஒண்ணு போலத் தெரியவில்லை. தொடங்கிய வேகத்திலேயே திரும்பி கோவை வந்து பின்னர் மீண்டும் கிளம்பி மீண்டும் வந்து கிளம்பி என்று எவ்வித திட்டமிடலும் இன்றி ‘ஏனோ தானோ’ என்று இருப்பதைப் போல அவரது மொழிநடையும் ஜாலியாக நண்பர்கள் பேசி கொண்டிருப்பதைப் போல ஆரம்பித்தாலும் அதிலும் ஏதோ ஒரு ‘மெத்தட் இன் மேட்னஸ்’ போல ஒழுங்கு இருப்பதை விரைவிலேயே உணரத் தொடங்குவோம்.

ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் பின்னர் தொடர்ந்து லே’ வை நோக்கிய பயணம் பாதியில் கார்கிலுக்கு முன்பாகவே  அதி உயர சுகவீனத்தால் முடிந்து போனதைப் படிக்கையில் கார்கிலையும் தாண்டி லே வரை நான் போயிருக்கிறேனே என்று கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் சென்ற பொழுது என்னுடன் வந்த நண்பருக்கும் கார்கிலில் இந்தப் பிரச்னை ஏற்ப்பட்டதால் சாலை வழியாக லே செல்பவர்கள் முன்பாகவே தகுந்த ஆலோசனை பெற்றுச் செல்வது நல்லது என்று நினைக்கிறேன்.

திருமணமாகியும் எவ்வித உறவுமின்றி வெறும் நட்பாகவே தீபன் மனைவியை நடத்தினாலும், இரண்டு மூன்று நான்கு என்று அடுத்தடுத்து பார்க்கும் பெண்களிடம் தொடரும் ‘ப்ளாட்டோனிக் காதல்’, தோல்வியடையும் சொந்த பண்ணை முயற்சி, கடன் சுமை என்று வர வர சவ்வு மிட்டாய் மாதிரி எப்படா படித்து முடிப்போம் என்று ஆகி விட்டது.

தமிழ் சினிமா அப்பாக்கள், ஏன் நிஜ அப்பாக்களும் எப்படிப்பட்ட செயல்பாடுடைய பிள்ளைகளை ‘உதவாக்கரை’ என்ற வார்த்தையில் அடக்குவார்களோ, அந்த செயல்பாடுகளை எவ்வித தயக்கமுமின்றி கூறிக் கொண்டே போய் அந்த வாழ்க்கை தந்த அனுபவத்தில் தற்போது இயற்கை வேளாண்மையை ஓரம் கட்டி வைத்து விட்டு ‘கிரியேட்டிவ் டைரக்டர் (வேகபாண்ட் மூவீஸ்) என்று ஒதுங்கி விட்டார் தீபன்…

வேலை வெட்டி ஏதும் இல்லை என்றால், அவ்வப்போது பளிச்சிடும் ப்ரில்லியன்ஸுக்குக்காக படிக்கலாம்.

Friday 15 April 2016

தேர்தல் ஸ்பெஷல்

நண்பர். சீனியர் வழக்குரைஞர். கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் மதுரையில் நடந்த ஏதோ ஒரு இடைத் தேர்தல். காலையில் எழுந்ததும் செய்தித்தாளைத் தேடியவர், கதவிடுக்கில் வைக்கப்பட்டிருந்த கவரிலிருந்த இரண்டு ஆயிரம் ரூபாய்த் தாள்களைப் பார்த்து கொதித்துப் போனார்.

கொதித்துப் பொங்கிய நண்பரின் மனதை ஆற்றியது, தொடர்ந்து ‘மக்களோடு மட்டுமே கூட்டணி’ அமைச்சு வாக்கு கேட்டு வந்த தேதிமுக கட்சியினர்.

‘சார், தப்பா நினைச்சுக்காதீங்க. எங்களால இப்ப ஒன்னும் செய்ய முடியாது. கொஞ்ச வருசத்தில நாங்க ஆட்சிக்கு வந்துருவோம். அப்ப நாங்களும் அவங்கள மாதிரி செய்வோம்’

-oOo-

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் மட்டும் அல்லாமல் மற்றவர்களிடமும் கூட்டணி அமைப்பது என்று நெருக்கமானவர்களிடம் ஆலோசித்த விஜயகாந்த் சொன்னதாக வந்த தகவல், ‘அம்மாவுடன் சேர்ந்தால் மானம் இருக்காது. ஐயாவுடன் போனால் கட்சியே இருக்காது’

இரண்டுமே அடுத்தடுத்து நடந்து விட்டது.

-oOo-

சொல்லக் கேள்விப்பட்ட செய்திதான். ஆனால், சொன்னவர் சம்பந்தப்பட்டவருக்கு நெருக்கமானவர். ஒரு வழியில் உறவினர்.

அந்த இளைஞருக்கு கல்லூரிக் காலத்திலிருந்தே இந்திய ஆட்சிப் பணிக்குச் செல்ல வேண்டும் என்று தணியாத ஆசை. கடுமையாக உழைத்தார். அதோடு பேச்சுப் போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளினார்.

அன்றைய கால இளைஞர்களைப் போல அதீத தமிழார்வம். அதை ஒட்டிய அரசியல் பார்வை.

ஐஏஎஸ் முக்கிய தேர்விலும் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார். தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பு ஆலோசனை வேண்டி கல்லூரி நாட்களில் அவரைக் கவர்ந்த அரசியல் தலைவரை சந்தித்தார்.  தமிழர்களும் தமிழ்நாடும் வஞ்சிக்கப்படுவதாகவும், அந்த இளைஞரைப் போன்றவர்கள் ஆட்சிப் பணிக்குள் நுழைந்து அதை மாற்ற வேண்டும் என்றும் மேலும் உசுப்பி கொம்பு சீவினாராம்.

அதே வேகத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர், தேர்வு அதிகாரிகளிடம் தமிழின் தொன்மை, தமிழர்களின் கலாச்சாரப் பெருமை என்று போட்டுத் தாக்கியதில் பயந்து போன அந்த வட இந்திய அதிகாரிகள் ‘இவன் ஆபத்தான ஆசாமியாக இருப்பானோ’ என்று முடிவு கட்டியதில் இளைஞரின் ஐ ஏ எஸ் கனவு சிதைந்து போனதாம்.

ஆயினும் மனம் தளராத அந்த இளைஞர் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் நடத்தும் க்ரூப் 1 தேர்வு எழுதி அதன் மூலம் தமிழக ஆட்சிப் பணிக்குள் நுழைந்தாராம். தற்போது கன்பர்ட் ஐ ஏ எஸ் அதிகாரிதான் என்றாலும், தனது நிர்வாகத் திறமையாலும், நேர்மையாலும் தமிழகத்தின் அனைத்து நேரடி ஐ ஏ எஸ் அதிகாரிகளையும் புகழில் ஓரம் கட்டி விட்டார்.

அந்த இளைஞர் உ.சகாயம்.

அரசியல் தலைவர்?

வேறு யார், வைகோ’தான்!

-oOo-

“தாத்தா மாதிரி வராதுங்க…” திமுக தலைவர் பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார் அந்த நண்பர். இரண்டு வருடங்கள் இருக்கும்.

‘தலைவரைப் பார்க்க வரச் சொல்லியிருந்தாங்க. என்னைப் பாத்தவுடனே தளபதி ‘இவர் கட்சியிலே இருந்துக்கிட்டே கூடங்குளம் போராட்டத்திலே தீவிரமா ஈடுபட்டுக்கிட்டு இருக்காரு. கட்சிக்கு விரோதமா செயல்படுராறுன்னு கம்ப்ளெயிண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாரு’

‘நானும் அத மறுக்கல. ஆனா தலைவர் கண்டுக்கவேயில்லை. என்னை பக்கத்துல கூப்பிட்டு ‘உதயகுமார் எப்படியா இருக்காரு. போராட்டமெல்லாம் எப்படி நடக்குன்னு உதயகுமார் சாரைப் பத்தியே விசாரிச்சுட்டு அனுப்பிட்டார். ஒன்னும் சொல்லல’

நண்பர் ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்கு பேசக் கூடியவர். பொது அறிவும் சமூக சிந்தனையும் நிரம்பியவர் என்பதோடு முக்கியமாக களத்தில் இறங்கிப் பணியாற்றக் கூடியவர். முழுக்கவும் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் நானறிந்தவரையில் நேர்மையானவர். ‘இவரைப் போன்றவர்களை எல்லாம் டெல்லிக்கு அனுப்பக் கூடாதா?’ என்று நான் ஆதங்கப்பட்டாலும், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை அவருக்கு வாய்ப்பு நழுவிப் போனது. ஆனாலும், ‘அடுத்த முறை எப்படியும் கிடைச்சுடும்’ என்று அதே உற்சாகத்துடன் பேசுவார். எனக்கு நம்பிக்கையில்லாமல்தானிருந்தது.

இப்போது கிடைத்து விட்டது. பொறுமை; அரசியலில் முக்கியம்.

Sunday 10 April 2016

காலப் பெட்டகம் (ஆனந்த விகடன்)

கடந்த ஞாயிறு ‘தி ஹிந்து’வில் ‘எ கே ப்ளான் தட் லெட் டு அண்ணாதுரை’ஸ் டிஃபீட்’ என்ற தலைப்பிலான செய்தியை பலர் கவனிக்கத் தவறியிருக்கலாம்.

1957ம் ஆண்டு திமுக முதன் முதலாக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்று அண்ணாதுரை, கருணாநிதி உட்பட பதினைந்து பேர் சட்டசபைக்கு செல்கிறார்கள். பதினைந்து பேர்தான். ஆனால் அவர்கள் கொடுத்த கடுமையான குடைச்சலில் கடுப்பான காமராஜர் அடுத்த தேர்தலில் அந்தப் பதினைந்து பேரும் மீண்டும் சட்டசபைக்கு வந்து விடக்கூடாது என்று வகுத்த வியூகம்தான் கே ப்ளான் எனப்படுவது.

போக்குவரத்து முதலாளி, தொழிலதிபர் என்று பணபலம் மிகுந்த வேட்பாளர்கள் அந்த பதினைந்து பேர்களை எதிர்த்து நிற்க வைக்கப்பட்டதோடு, அந்த தொகுதிகளில் காங்கிரஸ் முழுக்கவனத்தோடு பிரச்சாரம் செய்தது.

பலன், கருணாநிதி தவிர மற்றவரக்ள், அண்ணாதுரை உட்பட தோல்வியடைகிறார்கள்.  காமராஜ் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது பலர் அறிவோம். அண்ணா தோற்கடிக்கப்பட்டது அவ்வளவாக அறியப்படாதது.

தேர்தலில் பணம் விளையாடுவது எல்லாம் இப்போதுதான்; அதெல்லாம் அந்தக் காலத்தில் இல்லை என்று இன்னமும் சாதிப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

‘ஓட் கொடுக்கும் சுதந்திரத்தைப் பூண்டிலகும் பிரஜைகளே! தற்காலம் தங்களிடம் வந்து அபேட்சகர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் செய்யும் ஜால்ஜூல்களுக்கும், பணம், பலகாரம்…………..முதலியவற்றிற்கும் மகிழ்ந்து உங்கள் ஓட்டுரிமைச் சீரைத் தீய வழியில் செலுத்தாதீர்கள்’

இப்படி வாக்காளர்களை வேண்டுவது ஆனந்த விகடன், வருடம் 1926.

‘தேர்தல் என்றால் என்ன? பொய் சொல்லுதலில் தேர்தல், லஞ்சங் கொடுத்தலில் தேர்தல், தேனொழுகப் பேசுவதில் தேர்தல், செய்ய முடியாத காரியங்களையெல்லாம் செய்கிறேனென்று வாக்குறுதி கொடுப்பதில் தேர்தல் முதலிய எல்லாம் அந்தந்த விஷயம் சம்பந்தப்பட்டவரையில் தேர்தல்தான். இவ்வளவு விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்தலிலும் வெற்றி பெறுவார்களென்பதில் சந்தேகமில்லை’

‘தேர்தல் நாடகத்தில் கோர ரஸம் என்றொரு அம்சமுண்டு.............................ஒருவரையே இரண்டு மூன்று தடவைகள் வோட் செய்யச் சொல்வதும்.......................................வாக்காளர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டு இப்பால் இறந்து போனவருக்குப் பதிலாக எவரை விட்டேனும் வோட் செய்யச் சொல்வதும் சில திருவிளையாடல்களாகும்’

1930ம் ஆண்டு வெளிவந்த ஆனந்த விகடனிலிருந்து.

1926 பின் நான்கு வருடங்கள் கழிந்து 1930ம் ஆண்டு என்று எவ்வித வித்தியாசமுமின்றி தொடர்ந்த பிரச்சார உத்திகள் இன்று வரை மாறவில்லை. கள்ள ஓட்டு தவிர...

ஆனந்த விகடன் தொடங்கப்பட்ட 1926ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலான இதழ்களிலிருந்து சுவையான பகுதிகளை தொகுத்து ‘காலப் பெட்டகம்’ என்ற பெயரில் 200 ரூபாய்க்கு 368 பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

முன்பு எல்லாம் பள்ளி நண்பர்கள் வீட்டுக்கு அதுவும் கலியாண வயதில் பெண்கள் இருக்கும் வீட்டுக்குப் போனால் கண்டிப்பாக பைண்டு செய்யப்பட்ட தொடர்கதைகள் இருக்கும். எனக்கு கதையைப் படிப்பதை விட அங்கங்கு கிடைக்கும் துணுக்குகளைப் படிக்கப் பிடிக்கும்.

அந்த அனுபவத்தை திகட்டத் திகட்டத் தருகிறது ஆனந்த விகடனின் ‘காலப் பெட்டகம்’

Sunday 3 April 2016

இலவசமா, கலர் டிவி, மடிக்கணணி, மிக்ஸி, கிரைண்டர்கள்?

நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட நேரம். வழக்குரைஞர் ஒருவர் என்னை அணுகி ‘தேர்தல் அறிக்கையில் இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பிரிட்ஜ் போன்றவற்றை கொடுப்பதாக கூறுவதை தடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தான் தாக்கல் செய்ய இருக்கும் நீதிப்பேராணை மனுவில் அவருக்காக நான் வாதிட வேண்டும்’ என்று கேட்டார்.

’சில வருடங்களுக்கு முன்னர், தமிழக அரசு இலவச தொலைக்காட்சி வழங்கிய திட்டத்தினை எதிர்த்து தற்பொழுது பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் கண்ணன் அவர்கள் வாதிட்ட நீதிப்பேராணை மனு தள்ளுபடியான’ விபரத்தை அவருக்கு நினைவு படுத்தினேன்.

வந்தவரோ விடவில்லை. ‘அந்த வழக்கு அரசு திட்டச் செலவுகளைப் பற்றியது. இந்த வழக்கு, இவ்வாறு அறிவிப்பது வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் லஞ்சம் என்ற ரீதியில் தாக்கல் செய்யப்படுகிறது’ என்றார்.

‘இது பொதுநல வழக்கு. ஓரளவிற்காவது, இதன் நோக்கங்களோடு தனிப்பட்ட வகையில் நான் ஒத்துப் போனாலொழிய எப்படி இந்த வழக்கில் வாதிடுவது?’ என்று கேட்டேன்.

‘இப்படி ஒரு அறிக்கையோடு நீங்கள் எபப்டி ஒத்துப் போக இயலும். இது மக்களை ஏமாற்றி சோம்பேறிகளாக்கும் மோசடி இல்லையா?’ என்றார்.

’நீங்கள் என்ன பள்ளியில் படித்தீர்கள்?’

‘அரசு உதவி பெற்ற தனியார் பள்ளியில்’

‘அப்படியாயின் நீங்கள் பெற்ற கல்வி இலவசம்தானே! சட்டக் கல்லூரியில் கூட நீங்கள் செலுத்திய சொற்ப கட்டணத்தை வைத்து, பேராசிரியர்களின் சம்பளத்தை கொடுத்திருக்க முடியுமா?’

’அது கல்வி. அந்தச் செலவோடு இந்த தண்டச் செலவான தொலைக்காட்சியை ஒப்பிட முடியுமா?’

’ஏன் உங்கள் வீட்டில் நீங்கள் தொலைக்காட்சி வைத்திருக்கிறீர்கள்தானே? அதனை வாங்குவது உங்களுக்கு தண்டச்செலவாகப் படவில்லையே’ என்றேன்.

‘அது எப்படி சார், எனது பிள்ளைகளின் கல்விக்கு செலவிட்டது போக எஞ்சியிருக்கும் பணத்தில்தான் நான் தொலைக்காட்சி வாங்கியுள்ளேன். தொலைகாட்சியா, கல்வியா என்றால் நான்கல்விக்குத்தான் முதலிடம் கொடுப்பேன்’

‘அப்படியா, உங்கள் மகள் படிக்கும் பள்ளியில் கட்டணம் எவ்வளவு?’

‘காலாண்டிற்கு பதினைந்தாயிரம்’

‘நம்ம ஊரில் காலாண்டிற்கு இருபத்தைந்தாயிரம் கட்டணம் வசூலிக்கும் பள்ளி உள்ளது. ஏன் அங்கு சேர்த்திருக்கலாமே!’

‘எது அந்த ஏ.சி.கிளாஸ்ரூம் உள்ள பள்ளியா? நம்ம வசதிக்கு இது போதும்’

‘ஏன், நீங்கள் உங்களது வீட்டிலுள்ள தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் போன்றவற்றை வாங்காமலிருந்தால் அந்தப் பள்ளிக்கு உங்கள் மகளை அனுப்பலாமே’ என்றேன்.

‘சார், இது என்ன விதண்டாவாதம்? எனக்கு கிடைக்கும் வ்ருமானத்தை இன்னின்ன வகைக்கு இவ்வளவு என்று பிரித்து செலவளிக்க எனக்கு புத்தியில்லையா?’

‘அதுவேதான், அதே வகையான புத்தி இந்த இலவச தொலைக்காட்சி பெறும் பயனாளிக்கு இல்லை என்று நீங்கள் எப்படி கருத முடியும்?’

’என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர் என்ன அவரது வருமானத்திலிருந்தா தொலைக்காட்சியை வாங்குகிறார்?. அரசாங்கம் ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி’

‘சரி, உங்கள் மகள் படிக்கும் தனியார் பள்ளியில் உள்ள வாட்ச்மேனுக்கு என்ன சம்பளம் இருக்கும்?’

‘இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் இருக்கலாம்’

‘ஆசிரியருக்கு?’

‘ஐயாயிரம் என்று நினைக்கிறேன்’

‘இதே வாட்சுமேனும், ஆசிரியரும் அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் வேலை பார்த்தால் அவர்களுக்குறிய சம்பளம் பத்தாயிரம் மற்றும் இருபதாயிரத்தை தாண்டும் இல்லையா?’

‘ஆம்’

‘அரசு ஊழியர்களின் சம்பளத்தை எப்படி நிர்ணயிக்கிறார்கள்?’

‘அவர்களது கல்வித் தகுதி, செய்யும் வேலை, மற்றும் விலைவாசி ஆகியவற்றை கணக்கில் எடுத்து நிர்ணயிக்கிறார்கள்’

‘ஆக, நியாயமாக இருபதாயிரம் ரூபாய் பெற வேண்டிய ஒரு ஆசிரியர் ஐந்தாயிரம் மட்டும் பெற்றுக் கொண்டு உங்கள் மகளுக்கு பாடம் எடுக்கிறார். பத்தாயிரம் பெற வேண்டிய காவலாளி...’

‘நீங்கள் கூற வருவது புரிகிறது. எனது மகளின் கல்வியும் இலவசம் என்றுதானே. சந்தையில் ஏகப்பட்ட காவலாளிகள் கிடைக்கிறார்கள். சந்தையே அவர்களது சம்பளத்தையும் நிர்ணயிக்கிறது. மேலும் இந்த இலவசம் அரசு தரும் இலவசமல்லவே!’

‘அதுவேதான் நான் கூற வருவது. சந்தையில் நிர்ணயிக்கப்படுவதால், அந்த காவலாளிக்கு நியாயமாக போக வேண்டிய எழாயிரம் ரூபாய் தடுக்கப்படுகிறது இல்லையா?’

‘சரி, அப்படியே எடுத்துக் கொள்வோம். அதனாலென்ன?’

‘அதனாலாயே அந்த காவலாளி தனது மகளுக்கு கல்வியையாவது தர வேண்டி தான் வாங்க ஆசைப்படும் தொலைக்காட்சியை வாங்கமலிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோமா?’

‘ம்...’

‘எனவே, நீங்கள் தர மறுக்கும் பதினைந்தாயிரத்தை அரசு வரியாக எடுத்து ஆசிரியர் வாங்க நினைக்கும் தொலைக்காட்சியாக அவருக்குத் தருகிறது. அவ்வளவுதான்’

’அப்படியாயின், அது சந்தையின் செயல்பாட்டில் அரசு தலையிடும் செயலல்லவா?’

’இல்லை, இதுவும் சந்தையின் செயல்பாடுதான். எப்படி பெற்றோர்கள் அனைவரும் சேர்ந்து காவலாளிக்கு மூவாயிரம் என்று தீர்மானிக்கிறீர்கள். காவலாளிகள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஏழைகளுக்கு இலவசமாக தொலைக்காட்சி தர வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்’.

‘ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் அனைவரும் சென்று ஓட்டு போடுவதால் மட்டும் அரசு அவர்கள் சார்பாக நடந்து கொள்ள வேண்டும் எனபதற்காக, இது தார்மீக அடிப்படையில் சரியில்லையே!’

’அந்தக் காவலாளியும் சரி, நீங்களும் சரி ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் உழைக்கிறீர்கள். அவர் மாதம் ஐயாயிரம் தாண்ட முடியாது. நீங்கள் ஐம்பதாயிரம் பெறுகிறீர்கள். இது என்ன தார்மீக அடிப்படையில் என்றால் சந்தையை காரணம் காட்டுகிறீர்கள். நம்மைப் போல வழக்குரைஞர்கள் எல்லாம் சேர்ந்து இதுதான் கட்டணம் என்று  நிர்ணயிக்கிறோம். காவலாளிகளும் தேர்தலில் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். அதுவும் சந்தைதானேயொழிய சந்தைக்கு இடையூறு செய்வதல்ல.’

‘அதற்காக என்னுடைய வரிப்பணம் பாழாக்கப்பட்டால், கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?’

‘இது சரியான செயல். மக்களாட்சியில் அனைத்து மக்கள் கூட்டங்களுக்கும் அவரவர்கள் நலனை பாதிக்கும் எந்த அம்சத்தையும் கேள்வி கேட்க உரிமை உண்டு. கேளுங்கள். சட்டத்திற்குட்பட்ட வகையில் தடுக்கவும் பாருங்கள். ஆனால், தங்களுக்கு நலன் என்பதை கேட்டுப் பெறுவதற்கு மற்ற மக்கள் கூட்டத்திற்கும் உரிமை உண்டு என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். மக்களாட்சி சந்தை எவருடைய குரல் வலிமையானது என்பதை தீர்மானிக்கட்டும்’.

‘சரி, ஓரளவுக்கு கல்வியை உயர்நிலைப் பள்ளி வரையாவது அனைவருக்கும் அரசு கொடுக்கிறது. ஆனால், இந்த வீண் செலவை தவிர்த்தால் ஏழைகளுக்கு தேவையான் குடிநீர், கழிப்பிட வச்திகளை அரசு செய்ய முடியுமே. அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’

‘முதலில் ஏழை மக்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதி என்று சும்மா சொல்லாதீர்கள். உங்கள் மனதில் நிசமாகவே ஓடுவது, நாற்கர சாலை போல நவீன சாலைகளை போடலாமே, இன்னும் இரண்டு மின்சார உற்பத்திச்சாலைகள உருவாக்கலாமே என்றுதானே......இந்தச் சாலை, மின்வெட்டு இதனால் காவலாளிகளை விட வசதிகளுக்கு பழகிவிட்ட நமக்குத்தான் பாதிப்பு அதிகம். காவலாளிகள் நாற்கர சாலையில் பறப்பதில்லை. மின்சாரம் பெருகி தொழில்வளம் பெருகினால் காவலாளிகளின் வாழ்க்கைத் தரம் தன்னாலேயே கூடும் என்பதெல்லாம், இங்கு நடக்குமா என்பது கேள்விக்குறி. தாராளமயாக்கல் கொள்கையை புகுத்தி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்னமும் நாம் குறைந்தபட்ச கூலிச்சட்டம் வைத்திருக்கிறோம். பின் எப்போதோ ஒரு தலைமுறைக்கு கிடைக்கப் போவதாக சொல்லப்படும் வசதிக்காக இவர்களை ஏன் தங்களது வசதியை தியாகம் செய்ய வேண்டும்

’குடிநீர், கழிப்பிட வசதி?’

‘அவை அடிப்படை உரிமை. அதைக் கேளுங்கள். எந்த அரசாவது இலவச தொலைக்காட்சி கொடுப்பதால், கழிப்பிடம் கட்ட பணம் இல்லை என்று கூற முடியுமா?’

‘வாதத்திற்கு சரி, நடைமுறையில்?’

‘முதலில் ஏழைகள் தங்களுடையதை கேட்டுப் பெற்றுக் கொள்வார்கள். அதற்கான வழிமுறைகளும் உள்ளது. அடிமட்ட அரசியல்வாதிகளை நீங்கள் கேலி செய்யலாம். எம் எல் ஏ என்றாலே ரவுடி என்று சினிமா பட ரேஞ்சில் குற்றம் சாட்டலாம். ஆனால் அவர்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு புரியாது. ரொம்பவும் ஏழைகளுக்காக ஆதங்கப்பட்டால், இன்னும் அதிகமாக வரி கட்ட தயாராக இருக்கிறீர்களா?’  

‘நான் ஏற்கனவே வரியாக அழும் தண்டம் போதாதா?’

‘தண்டம் என்று யார் சொன்னது? இந்த இலவசங்களின் பலன் கடைசியில் உங்களுக்குத்தான் தெரியுமா?’

‘அது எப்படி?’

‘இலவசமாக தொலைக்காட்சியை பெறும் காவலாளி சம்பள உயர்வு கேட்கும் வாய்ப்பு குறைவு. சம்பள உயர்வுக்கான பொறி வீட்டில் மற்றவரின் நச்சரிப்பில், குழந்தைகளின் கெஞ்சலில் தொடங்குகிறது. சம்பள உயர்வு கேட்கவில்லையெனில், பள்ளியினை நடத்தும் பொருட்செலவு குறைகிறது. உங்கள் மகளின் கட்டணமும் கூடாது’

‘இது ரொம்ப ஓவர்...’

‘இதுவே ஓவரென்றால்...உங்கள் பாதுகாப்பு செலவு மிச்சப்படுவதை எதில் சேர்ப்பது?’

‘அது எப்படி?’

’நீங்கள் மட்டும் தொலைக்காட்சி் தொடர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், தொலைக்காட்சி வாங்க முடியாத ஒரு ஏழை இளைஞன் அதை உங்கள் வீட்டிலிருந்து எடுக்க எண்ணம் கொண்டால்...’

‘என்ன மிரட்டுறீங்க.....அப்ப நகை திருடுராங்கன்னு இலவச நகை கொடுக்க சொல்வீங்க போல’

‘ஒரு யூகம்தான். இந்த மாதிரி சமூக நல ஏற்ப்பாடுகள் மற்றும் திட்டங்கள் எல்லாமே, நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களும், இந்த நாட்டில் நானும் ஒரு அங்கம். இதன் வளத்தில் எனக்கும் பங்கு உண்டு என்ற எண்ணப்பாட்டினை தோற்றுவிக்கவே செயல்படுத்தப்படுகின்றன. பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்று ஒரு பக்கம் விளம்பரபடுத்திக் கொண்டே அதன் பலனை பெருந்திரளான ஒரு மக்கள் கூட்டத்துக்கு மறுத்துக் கொண்டே இருந்தால், அவர்களின் எதிர்பார்ப்பு நம்மைப் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பாக மாறி விடாமல் தடுக்கவும்தான் இது போன்ற ஏற்ப்பாடுகள்’

’கம்யூனிச புரட்சியா?’

‘இப்படிப் பேசிட்டா உடனே கம்யூனிஸ்ட்டா? நான் அவ்வளவு ஒர்த் இல்லை. கேளுங்கள், ஏழைகளின் வெறுப்பு ஒட்டுமொத்த புரட்சியாகத்தான் வெடிக்க வேண்டும் என்பதில்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இங்கில்லை. ஆனால், திருட்டு, வன்முறை, கிளர்ச்சி, சூறையாடுதல் என்று எத்தனையோ வடிவங்களில் இருக்கலாம். நாம் இதை பலமுறை பார்த்ததுதான். எனவே, இந்த செலவினங்கள் எல்லாம், நம்மை பாதுகாத்துக் கொள்ளும் இன்சூரன்ஸ் போலவும் எடுத்துக் கொள்ளலாம்.’

’இந்தக் கருத்து அதீதமான யூகமாக இருக்கிறது’

’ஏன் சந்தைப் பொருளாதாரத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க நாட்டிலேயே சமூகப் பாதுகாப்பு ஏற்ப்பாடுகளுக்கு கணிசமான தொகை செலவிடப்படுகிறது. வேலையற்றோருக்கு கிடைக்கும் பாதுகாப்புத் தொகை முதல் உணவு கூப்பன் வரையில். இவ்வாறான பாதுகாப்புகளே பல்வேறு பொருளாதார வீழ்ச்சிகளில் பாதிக்கப்படும் அமெரிக்கர்களை சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கையிழக்காமல் இருக்கச் செய்கிறது. உதாரணமாக, ரொனால்டு ரீகன் எவ்வளவுதான் சமூக பாதுகாப்பு ஏற்ப்பாடுகளுக்கு ஏதிராக பேசி வந்தாலும், அவரது பிரபல்யத்துக்கு பங்கம் வராமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அவரது ஆட்சிக் காலத்தில் சமூக பாதுகாப்பு செலவினங்கள் குறைக்கப்படவில்லை மாறாக அதிகரிக்கப்பட்டது, என்று சொல்வார்கள்’

‘சார், என்னைப் பேச விடாமல் இந்த உரையாடலை உங்கள் இஷ்டத்திற்கு ஏற்றது போல எங்கோ கொண்டு சென்று விட்டீர்கள். மனதை தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் ஆட்சி செய்தால், இருக்கும் பணத்தைக் கொண்டு கழிப்பிடம் கட்டுவீர்களா? இல்லை தொலைக்காட்சி கொடுப்பீர்களா?

’உங்களுக்காகத்தான் ஏகப்பட்ட நபர்கள் ஏற்கனவே பேசி விட்டனரே...நான் இப்படித்தான் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது இல்லையா? அது போலவே கழிப்பிடம் கட்ட வேண்டுமா அல்லது மிக்ஸி கொடுக்க வேண்டுமா என்பதை பதவி ஏற்கப்போகும் தமிழக் முதல்வரும், அவருக்கு ஓட்டுப் போட்ட பெருவாரியான மக்கள் கூட்டமும் தீர்மானிக்கட்டும்’

’போங்க சார், இது சப்பைக்கட்டு....நீங்கள் இயலாததை நிறுவப் பார்க்கிறீர்கள்’

Advocacy is an art of managing impossibities’ இல்லையா?’


(05/05/11 அன்று எழுதப்பட்டது. கொஞ்சம் உண்மை மீதி கற்பனை உரையாடல்)

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....